மின்சாரம் பாய்ந்து மேஸ்திரி சாவு காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் இளையராஜா (40). கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் கொடுங்கையூர் எம்ஆர்.நகர் வடிவுடையம்மன் கோயில் தெருவில் உள்ள முகைதீன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டார். இவருடன் 5க்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர். அப்போது, சிமென்ட் கலவை தயார்செய்ய தண்ணீர் தேவைப்பட்டதால், இளையராஜா அங்கிருந்த மின் மோட்டாரை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே இளையராஜாவின் உறவினர்கள் கொடுங்கையூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, ‘‘மின்சாரம் பாய்ந்து பலியான இளையராஜா குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று கோஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ‘‘சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: