×

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் பாஜ, அதிமுக அரசுகளை கண்டித்து வரும் 17ல் கண்டன ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த மத்திய பாஜ மற்றும் அதிமுக அரசுகளை கண்டித்து திமுக சார்பில் வரும் 17ம்தேதி மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதசார்பின்மை, சமஉரிமை, சகோதரத்துவம்,  சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்’ மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜ அரசுக்கு துணை நின்று சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது.

மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு, இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மத்திய பாஜ அரசின் சிறுபான்மையினர் விரோத, தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்த ஆதரவளித்து வரும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, திமுக வரும் 17ம்தேதி செவ்வாய்கிழமை அன்று மாவட்டக் செயலாளர்கள் தலைமையில், மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், துணை அமைப்புகளான அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Protests ,Sri Lanka ,regimes ,BJP ,AIADMK , Protests, Sri Lanka condemning, BJP and AIADMK regimes
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்