நாகை: மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை உடனே துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி நடத்தினர். நாகை மாவட்டத்தில் 325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்காக ஒரத்தூர் என்ற இடத்தில் 60 ஏக்கர் நிலத்தை கலெக்டர் பிரவீன் பி.நாயர் தேர்வு செய்து, ஒப்புதலுக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில் மருத்துவ வசதி குறைந்த மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. அதேவேளையில், தங்கள் பகுதிக்கு வரவுள்ள மருத்துவ கல்லூரியை விட்டு விடக்கூடாது என்று நாகை மக்கள், மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஒருநாள் கடையடைப்பு மற்றும் பேரணி நடத்தினர். இதனால், நாகையில் 3 ஆயிரம் ஓட்டல்கள், கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.