மருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி

நாகை: மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை உடனே துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி நடத்தினர். நாகை மாவட்டத்தில் 325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்காக ஒரத்தூர் என்ற இடத்தில் 60 ஏக்கர் நிலத்தை கலெக்டர் பிரவீன் பி.நாயர் தேர்வு செய்து, ஒப்புதலுக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  இதற்கிடையில் மருத்துவ வசதி குறைந்த மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. அதேவேளையில், தங்கள் பகுதிக்கு வரவுள்ள மருத்துவ கல்லூரியை விட்டு விடக்கூடாது என்று நாகை மக்கள், மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஒருநாள் கடையடைப்பு மற்றும் பேரணி நடத்தினர். இதனால், நாகையில் 3 ஆயிரம்  ஓட்டல்கள், கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

2 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள்  ஓடவில்லை. 50க்கும் அதிகமான தனியார் நகர பஸ்கள் இயக்கப்படவில்லை. நாகையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் இயக்கப்படவில்லை. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகையில் 75 வக்கீல்கள் நேற்று ஒருநாள் மட்டும் கோர்ட் பணியை புறக்கணித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய வர்த்தக தொழிற் குழும நாகை தலைவர் ரவி தலைமையில் பேரணி நடந்தது. இதில் அனைத்து அரசியல் கட்சியினர், சேவை சங்கத்தினர், வர்த்தகர்கள், மீனவர்கள், பொது மக்கள் 3,000 பேர், தனியார் கல்லூரி மாணவர்கள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. கலவரம் ஏற்பட்டால் தடுக்க போலீசார் வஜ்ரா மற்றும் கண்காணிக்கும் ஈகிள் வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தியிருந்தனர்.

Related Stories: