புதுடெல்லி: பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பட்டாசு தொடர்பான வழக்கை வரும் பிப்ரவரி 19ம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக நேற்று தெரிவித்தது. நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. குறிப்பாக, பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, பேரியம் ரசாயனம் இல்லாமல் பட்டாசு தயாரிக்கவே முடியாது என பெசோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை கடந்த அகடோபர் 5ம் தேதி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார்.