குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிச.17ஆம் தேதி மாவட்டந்தோறும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து அங்கு துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விதமான குடியுரிமை சட்ட மசோதா நேற்று பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல அமைப்புகள் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிச.17ஆம் தேதி மாவட்டந்தோறும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க.- அ.தி.மு.க.வை கண்டித்து இந்த போராட்டம்  நடைபெறும். மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு, இந்த தமிழர் விரோதக் குடியுரிமை மசோதா, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.

மத்திய பாஜக அரசின் சிறுபான்மை விரோத, தமிழர் விரோதச் செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் டிசம்பர் -17 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, நகரப் பகுதி, ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், துணை அமைப்புகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories: