மழை காலங்களில் பாதிக்கப்படும் நெற்பயிரை காக்கும் வழிமுறை: விவசாயிகளுக்கு ஆலோசனை

பாபநாசம்: பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காவிரி பாசன பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளக்கால் பகுதிகள் அல்லது வடிகால் வசதியில்லாத நிலங்களில் தண்ணீர்  தேங்கி சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற்பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.  இதனால் வேர் பதுதிகளில் நல்ல காற்றோட்டம் உண்டாகும். இளம் நெற்பயிர்களானது கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே  அவ்வாறான நேரங்களில் அதே ரகம் மற்றும் வயதுடைய நாற்றுகளை கரைந்து போன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை  சரியாக பராமரிக்க வேண்டும். சற்று வயதான நெற்பயிராக இருந்தால் வயலில் அதிக தூர்கள் இருக்கும். குத்திலிருந்து சில தூர்களை பிடுங்கி கரைந்து  போன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கிய நிலையில் நெற்பயிருக்கு பிராண வாயு சரிவர கிடைக்காமல் வேர்களின் சுவாசம் பாதிக்கப்படும். பிராணவாயு பயிருக்கு  கிடைக்காமல் போவதால் அதை சார்ந்த நுண்ணுயிரிகளின் செயல்பாடு குறைந்து விடும் அல்லது நின்று விடும். மண் அதிகம் குளிர்ந்து விடுவதால்  இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பமடைய அதிக கால அவகாசம் எடுத்து கொள்ளும். இந்த குளிர்ந்த  நிலையில் மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகம் மற்றும் தாமிர சத்துகளை பயிர் எடுத்து கொள்ளும் அளவு குறைந்து விடுவதால் உண்டாகும்  பற்றாக்குறையால் நெற்பயிரின் வளர்ச்சி தடைபடும்.மழைநீர் வடியும்போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துகளின்  கரைத்திறன் அதிகமாகி தண்ணீரோடு கலந்து வெளியேறி விடும். இதனால் நெற்பயிர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து சரிவர கிடைப்பதில் தடை  ஏற்படும். குளிர்ச்சியான வெப்பநிலையில் அங்கக பொருள்கள் பதன மாற்றமாகி சத்துகளாக உருமாற்றமாவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு  கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறி காணப்படும். மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனீசு சத்து  குறைந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.

மாங்கனீசு சத்தின் பற்றாக்குறையால் இலைப்புள்ளி நோய்கள் உண்டாகும். வெள்ளநீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இட  வேண்டும். இதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ  வேப்பம்புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து மறுநாள் இத்துடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட  வேண்டும். நுண்ணூட்ட கலவையை மேலுரமாக தெளிக்க வேண்டும்.

இலைவழி உரமாக அளிக்க வேண்டுமெனில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து  காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது மணிச்சத்தை டிஏபி உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்க வேண்டும்.  அதாவது ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த  நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தை சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதன்படி  செய்தால் மழை பாதிப்பிலிருந்து நெற்பயிர்களை காப்பாற்றலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: