ஸ்பிக்நகர்: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரம் வளர்ந்துள்ள பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் அபாயம் நிலவுவதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக தொழிலாக திகழ்கிறது. மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, பழையகாயல், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், கோரம்பள்ளம், அய்யனடைப்பு, காலாங்கரை, குலையன்கரிசல், சாயர்புரம் உள்ளிட்ட அநேக பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், காய்ந்திருந்த பார்த்தீனிய விதைகள் முளைக்க தொடங்கியுள்ளன. நச்சுத்தன்மை கொண்ட இச்செடிகள் விளைநிலங்களில் பயிர்களோடும், தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் அதிகமாக வளர்ந்துள்ளன. மற்ற செடிகளின் வளர்ச்சியை தடுத்து அதிகளவில் வளர்வதால் பயிர்களுக்கும் ஆபத்தாக விளங்குகிறது.