மணல் திருட்டால் ஆற்றின் கரைகள் சேதம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் ஏராளமான நபர்கள் மாட்டு வண்டிகளில் அரசு  அனுமதியின்றி மணல் எடுத்து செல்கின்றனர். கரையோரத்தில் மணல் எடுப்பதால் அதிகளவு பள்ளம் ஏற்பட்டு ஆற்றின் கரை உறுதிதன்மை இழந்து  வருகிறது. இந்த ஆற்றின் அருகே கொக்குப்பாளையம் பகுதியில் விவசாயிகள் நீராதாரம் காப்பாற்ற செக் டேம் கட்டப்பட்டது. இதன் அருகில் எவ்வித பாதிப்பும்  ஏற்படாமல் இருப்பதற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டது. ஆனால் மணல் அள்ளுபவர்கள் செக் டேமின் அருகிலேயே அதாவது 100 மீட்டருக்குள்ளாகவே மணல் அள்ளுகின்றனர்.

இதனால் மழை காலத்தில்  வெள்ளம் வரும்போது கரைகள் உடைந்து ஊருக்குள் புகும் சூழ்நிலை உள்ளது. செக் டேமும் உறுதி தன்மை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதேபோல் பல்வேறு இடங்களில் கரைகளின் அருகிலேயே மணல் எடுத்து வருகின்றனர். எனவே, ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும், மணல்  எடுப்பவர்கள் மீது காடாம்புலியூர், பண்ருட்டி, புதுப்பேட்டை ஆகிய காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றின் கரைகளை  பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: