ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பொங்கால்மட்டம் பகுதியில் வயதான தாயை பராமரிக்காத 3 மகன்கள் மாதந்தோறும் 4 ஆயிரம் வழங்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். ஊட்டி கோட்டத்திற்குட்பட்ட பெங்கால் மட்டம் கோத்திபென் பகுதியில் வசிப்பவர் ருக்கியம்மாள் (85). இவருக்கு ரவி, சுரேஷ், ரமேஷ் ஆகிய 3 மகன்களும், சரோஜா, பேபி, சின்னம்மாள் மற்றும் கமலா ஆகிய 4 மகள்களும் உள்ளனர். ருக்கியம்மாள் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு தனக்கான 18 ஏக்கர் தேயிலை தோட்டத்தை தலா 6 ஏக்கர் வீதம் 3 மகன்களுக்கும் பிரித்து கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் 3 மகன்களும் ருக்கியம்மாளை சரியாக கவனிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து ருக்கியம்மாள், ஊட்டி ஆர்.டி.ஓ. சுரேசிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ஆர்.டி.ஓ. நடவடிக்கை மேற்கொண்டார். மாசிக்கண்டி என்னுமிடத்தில் இருந்த ருக்கியம்மாளுக்கு சொந்தமான 80 சென்ட் பூமி, மகள் பேபி என்பவர் பராமரிப்பில் கொடுக்கப்பட்டது. மேலும் மகன்கள் சுரேஷ், ரவி ஆகியோரிடம் இருந்து தலா 1 லட்சம் பெறப்பட்டது. அதை வைத்தும், 80 சென்ட் நிலம் மூலமும் வரும் வருமானத்தை வைத்தும் ருக்கியம்மாளை பராமரிக்க மகள் பேபிக்கு ஆர்.டி.ஓ.வால் அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். மேலும், மகன்கள் 3 பேரும் மாதந்தோறும் தலா 4 ஆயிரம் வீதம் வழங்கி பராமரிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ருக்கியம்மாளின் 18 ஏக்கர் நில பரிவர்த்தனை நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, அந்த நிலம் மீண்டும் ருக்கியம்மாளுக்கே வழங்கப்படும் என்றும் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.