தமிழில் டிவிட் செய்தார்: பாரதியார் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: ‘மகாகவி பாரதியாரின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நமக்கு எழுச்சியூட்டுகின்றன,’ என பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார். பாரதியாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாரதியாரை புகழ்ந்து டிவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.

அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: