புதுடெல்லி: ‘‘சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் எதிலும் அடிப்படை வசதியான கழிவறை வசதி செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிராகவும் ரயில்வே அமைச்சகம் செயல்படுகிறது,’’ என மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றம்சாட்டினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில், சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் கழிவறை வசதி தொடர்பாக திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது:
சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரையிலும், திருவொற்றியூரில் இருந்து சென்னை வரையிலும் உள்ள புறநகர் ரயில் நிலையங்களில் எங்குமே அடிப்படை வசதியான கழிவறை வசதி செய்யப்படவில்லை. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் ஏராளமான பயணிகள், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கழிவறை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.