கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை அமோகம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் டாஸ்மாக் பாரை தாண்டி தான் செல்ல வேண்டும். பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அமர்ந்து மது அருந்துவார்கள். அந்த பகுதி முழுவதும் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளாக காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அவ்வழியே கடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மது விற்பனை தங்கு தடையின்றி தினமும் நடைபெற்று வருகிறது. சிலர் மது அருந்திவிட்டு போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.

மேலும் இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தால் சம்பவ இடத்திற்கு வந்து கண்துடைப்புக்காக சிலரை பிடிகிறார்களே தவிர நிரந்தர தீர்வு காண்பதில்லை. ஆகவே இந்த பகுதியில் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன் அடிதடி, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் அதிகாலை 3 மணியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் பரபரப்பாக காணப்படும். கோயம்பேட்டில் கூலி வேலை பார்க்கும் கூலித்தொழிலாளிகள் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு சாலையில் அமர்ந்து மது அருந்துவதால் அப்பகுதி முழுவதும் பாராக காட்சியளிக்கும். மேலும் அமைந்தகரை, அண்ணா நகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் மதுபானம் கள்ளச்சந்தையில் அதிகாலையில் விற்பனை நடக்கிறது. எனவே அண்ணா நகர் காவல் நிலைய துணை ஆணையர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மக்கள் நலன் கருதி கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: