செங்கல்பட்டு அருகே விவசாயி வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குவியல் பறிமுதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு

சென்னை: சென்னை அடுத்த செங்கல்பட்டு அனுமந்தபுரத்தில் விவசாயி வீட்டில் இருந்து ராக்கெட் லாஞ்சர் குவியல் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.   செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கு வருகிறது. இங்கு ராணுவம் ரயில்வே துறை மற்றும் தமிழக காவல்துறை ஆகிய துறை உயர் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், உதிரிபாகங்கள் அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது வழக்கம். சமீபத்தில் கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (47) என்பவர் இந்த பகுதியில் இருந்து வெடிக்காமல் கிடந்த ஒரு பொருளை பைக்கில் எடுத்து கொண்டு புறப்பட்டார். புளியந்தோப்பு தெருவில் சென்றபோது அந்த பொருள் தவறி கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் ராமகிருஷ்ணனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே பகுதியில் உள்ள வீட்டின் வாசலில் துணி சலவை செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவர் காயமடைந்தார். மேலும், அந்த ஓட்டு வீடும் சேதமானது. அருகில் உள்ள இரும்பு மின் கம்பத்தில் பெரிய துளை விழுந்ததோடு அப்பகுதி சிமென்ட் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன், திருப்போரூர் தாசில்தார் செந்தில்குமார், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வெடித்த மர்ம பொருளின் பாகங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் நேற்று அதிகாலை ராமகிருஷ்ணன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அனுமந்தபுரம் துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை சேகரித்து ராமகிருஷ்ணன் தனது வீட்டில் குவியல் குவியலாக பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வண்டலூர் அருகே முருகமங்கலத்தில் உள்ள வெடிகுண்டு கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர்.

இதனால் அனுமந்தபுரம் கிராமத்தில்  500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்து  சிகிச்சை பெறும் ராமகிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார்  முடிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் சிகிச்சை ெபறும் ராமகிருஷ்ணனிடம் துருவி துருவி விசாரித்தோம். ஆனால் அவரது பேச்சில் முரண்பாடு தெரிந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது ஏராளமான ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்தோம். இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினோம்.

அப்போது ராமகிருஷ்ணன், ராக்கெட் லாஞ்சரை பழைய இரும்புக்காக எடுத்து வந்ததாக கூறினார். அதில் வெடிக்காத குண்டும் இருந்தது. அதனை பாதுகாப்பாக வைத்துள்ளோம். நீதிமன்ற உத்தரவை பெற்று, வெடிக்காத குண்டுகளை செயலிழக்க வைப்போம்’’ என்றார். இதேபோல் கடந்த 3 மாதத்துக்கு முன்பு கூட மானம்பதி  பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். அதில்,  வெடிக்காத அதிபயங்கர ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க  வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: