ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்துள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் கருணரத்னே, ஒஷதா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர். கருணரத்னே 59 ரன், ஒஷதா 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 10, சண்டிமால் 2, ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ரன் எடுத்து வெளியேறினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்துள்ளது. மழை காரணமாக நேற்று 68.1 ஓவர் மட்டுமே வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனஞ்ஜெயா டிசில்வா 38, டிக்வெல்லா 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பாக். பந்துவீசில் நசீம் ஷா 2, அப்பாஸ், அப்ரிடி, ஷின்வாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.