3,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

ஆத்தூர்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் பிரியா (23). இவருக்கு கடந்த 1ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக, அரசு வழங்கும் திருமண உதவித்தொகை 25 ஆயிரத்தை பெறுவதற்கு சமூக நலத்துறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். தலைவாசல் யூனியன் அலுவலகத்தில் சமூகநல அலுவலர் கீதாவிடம் பிரியாவின் உறவினர் கார்த்திக் (25) சென்று விசாரித்தபோது பரிந்துரை செய்ய 3 ஆயிரம் லஞ்சம்   கேட்டுள்ளார். இதுபற்றி அவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய 3 ஆயிரத்தை கார்த்திக் நேற்று கீதாவிடம் கொடுத்தார். இதையடுத்து கீதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: