மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் சாவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள தலையாரிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மாசிலாமணி மனைவி சந்திரா(50). இவரது மகன்கள் இளையராஜா (27), இளவரசன் (25). தற்போது பெய்த மழையால் தங்களது கூரை வீட்டின் சுவர் கரைந்ததையடுத்து, அங்கு தகரம் வைக்கும் பணியில் நேற்று மாலை இளையராஜா மற்றும் இளவரசன் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் சந்திராவின் தம்பி பாரி(45) என்பவர் பணியில் ஈடுபட்டார்.

அப்போது தகரத்தினை மூன்று பேரும் சேர்ந்து எதிர்பாராவிதமாக உயரத்தில் தூக்கி விடவே அருகில் இருந்த மின்கம்பியில் அந்த தகரம் பட்டது. இதையடுத்து மூன்று பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். பின்னர் அருகிலிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு  மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: