அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அறிக்கை தர பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர், அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்மைப்பு வசதிகள் தொடர்பான அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் 300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில்  தேவைப்படும் மாணவ, மாணவியருக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, கூடுதலாக தேவைப்படும் வகுப்பறை வசதிகள் பள்ளிகளுக்கான சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான பரிந்துரை அறிக்கையை தயார் செய்து ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பரிந்துரையில் தெரிவிக்கப்படும் திட்டங்கள் நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும்.அதனால் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர்களை இதில் பரிந்துரை செய்யக்கூடாது.

Related Stories: