சென்னை: மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் கைகோர்த்து செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் ராஜகண்ணப்பன் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று முன்தினம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியவற்றில் சரியான இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடத்தாமல் தேர்தலில் குளறுபடி செய்து அறிவிப்பு செய்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது மோசமான நடவடிக்கையாகும்.எங்கு பார்த்தாலும் ஊராட்சி சாலைகள், பேரூராட்சி சாலைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. உள்ளாட்சி நிர்வாகம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.