தி.நகரில் நள்ளிரவு பரபரப்பு: பாஜ அலுவலகத்தில் புகுந்து இளம்பெண் திடீர் ரகளை

சென்னை: தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் ேநற்று நள்ளிரவு மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தி.நகர் வைத்தியராம் தெருவில் பாஜவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ேநற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளே நுழைந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இரவு என்பதால் நிர்வாகிகள் யாரும் இல்லை. எனவே, நாளை காலை வரும்படி கூறி அனுப்பினர். ஆனால், இளம்பெண் வெளியே செல்லாமல் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாம்பலம் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது, ராஜபாளையத்தை சேர்ந்த காவியா (27) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால் வீட்டை விட்டு ஓடிவந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பாஜ மாநில அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: