சென்னை: கீழடி அகழாய்வு 3 கட்ட ஆய்வு அறிக்கைகள் தாமதமாவதற்கு மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம் தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வின் முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. இவற்றை வெளியிட உயர் நீதிமன்றம் இருமுறை விதித்த கெடுவும் முடிந்து விட்ட நிலையில், அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது. முதற்கட்ட ஆய்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு அரசியல் காரணங்களை தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது. ஆய்வு அறிக்கை தயாரிக்க வேண்டிய அமர்நாத் கோவாவில் பணியில் உள்ளார். அவருக்கு உதவ வேண்டிய பணியாளர்கள் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் உள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொருட்கள் தமிழகத்தில் உள்ளன. இவர்களை ஒருங்கிணைக்க மத்திய தொல்லியல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.