சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய பிரமுகராக விளங்கிய ராயபுரம் மனோ திடீரென விலகியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியில் 13 ஆண்டுகளாக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் ராயபுரம் மனோ. கவுன்சிலராக பதவி வகித்த அவர் 3 முறை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டவர். காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில், அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் அவர் காங்கிரசில் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று அவர் நடத்திய நிகழ்ச்சியில், தான் காங்கிரஸ் கட்சியில் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து, ராயபுரம் மனோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று காங்கிரஸ் தலைமைக்கும், கட்சி நண்பர்களுக்கும் நான் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.