ஊழல், கொலைகார, கொள்ளைக்கார ஆட்சியாக இருந்த எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக மாறியிருக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை:  “இதுவரையில் ஊழல் ஆட்சி, கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லக் கூடிய நிலையில் இருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக மாறியிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வழக்கு தொடுத்த நிலையில், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருந்தோம். அதை ஏற்றுக்கொண்டு, சில அறிவிப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. 2016ல் திமுக ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடுத்த நேரத்தில் அப்போது அரசு செயலாளராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா ஒரு பிரமாண வாக்குமூலத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், 1991ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 2016ம் ஆண்டிற்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்தில் அதை மாற்றி 2011ம் ஆண்டுக்கான மக்கள்தொகை அடிப்படையில், 2016ம் ஆண்டிற்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் தவறாக சொல்லி இருக்கிறார். இந்த முரண்பாட்டை உச்ச நீதிமன்றம் உணர்ந்து 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் ‘டீலிமிட்டேஷன் கமிஷன்’ இடஒதுக்கீட்டை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என சொல்லியிருக்கிறது.  இந்த தீர்ப்பு தி.மு.க .வுக்கு கொடுத்த சம்மட்டி அடி என்று சி.வி.சண்முகம் பேசி இருக்கிறார்.ஏற்கனவே இதே உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் அரசு தரப்பில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லியிருந்தார்கள்.

அதில் எந்த சிக்கலும் இல்லை; முறையாகத்தான் பிரித்து வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அது இல்லை என்று உச்ச நீதிமன்றம் உணர்ந்த காரணத்தினால்தான் அந்த ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று வழிகாட்டுதல் கொடுத்தது. அவர்களுக்கு கொடுத்தது ‘மரண அடி’ என்பதுதான் என்னுடைய பதில். தி.மு.க.,வைப் பொறுத்தவரைக்கும் தேர்தலை நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. இடஒதுக்கீடு, மறுவரையறை இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்திவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பிறகு ஜெயக்குமாருக்கு என்ன அறிவுரை சொல்வது என்பது தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்திய நேரத்தில் திமுக சார்பில் எங்களுடைய மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடுமையாக எதிர்த்திருக்கிறார். எதிர்த்தது மட்டுமல்ல; அறிமுக நிலையிலேயே அதை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு, தி.மு.க. ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வெளிநடப்பு செய்து வந்து விட்டார்கள் என்று சித்தரித்து சில ஊடகங்கள் போட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு மறுபடியும் சென்று விவாதம் நடந்தபோது எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, துணிச்சலாக எல்லா பிரச்னைகளையும் அங்கு பதிவு செய்திருக்கிறார்.  அதுமட்டுமல்ல, இரவு 12 மணி வரைக்கும் விவாதம் நடந்திருக்கிறது. விவாதத்தில் முழுமையாக எங்களுடைய உறுப்பினர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டு, ஓட்டெடுப்பிலும் கலந்து கொண்டு அதை எதிர்த்து ஓட்டும் போட்டிருக்கிறார்கள்.  இதன்பிறகு நான் என்ன விளக்கம் சொல்ல வேண்டும். இப்பொழுது அதிமுகவைப் பொறுத்தவரையில் என்ன நிலை என்றால் இதை ஆதரித்து ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சார்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து பேசி இருக்கிறார்கள். ஆதரித்து பேசிய இந்த சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது, இந்த எடப்பாடி ஆட்சியை  இதுவரைக்கும் ஊழல் ஆட்சி, கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  

இப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ஆட்சியாகவும் எடப்பாடி ஆட்சி இருக்கிறது என்பதுதான் உண்மையான ஒன்று. எந்த தேர்தல் அறிக்கையாக இருந்தாலும் சரி; அது 110 விதியை பயன்படுத்தி சட்டமன்றத்தில் சொல்கிற உறுதிமொழியாக இருந்தாலும் சரி; எதையும் காப்பாற்றுகிற நிலையில் இந்த ஆட்சி இல்லை. மத்தியில் இருக்கும் பாஜ ஆட்சிக்கு எடுபிடியாக செயல்படுவதுதான் இவர்களுடைய லட்சியமாக இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: