மாநிலங்களவையில் #CAB2019 நிறைவேற்றம்: நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள்...பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: வட கிழக்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மசோதா, குடியுரிமை திருத்த மசோதா ஆகும். நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை  பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது. இந்நிலையில், மசோதா   தொடர்பாக நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை காரசார விவாதங்கள் நடைபெற்றது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தனர்.   இதன் அடிப்படையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 117 பேரும், எதிராக 92 பேரும் வாக்களித்ததால், மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து, மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தால், மசோதா   வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படும்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கும் ஒரு முக்கிய நாள் என்று  பதிவிட்டுள்ளார். மேலும், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி. மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மசோதா பல  ஆண்டுகளாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பலரின் துன்பத்தைத் தணிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: