மேலூர் அருகே விநோத திருவிழா: மண்ணை மலையாக்கி பக்தர்கள் வழிபாடு

மேலூர்: மேலூர் அருகே கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கி, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் உள்ளது பெருமாள்மலை. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது கோயிலை ஒட்டியுள்ள சேங்கை எனப்படும் ஓடையில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அருகில் போட்டு இறைவனை வழிபாடு செய்வார்கள். இத்துடன் மிளகு, உப்பும் அந்த மண்ணில் போடப்படும். இப்படி மண்ணை எடுத்து போட்டால் விவசாயம் செழிப்பதுடன், நோய் நொடியின்றி வாழலாம் என்பது ஐதீகம்.

பக்தர்களால் கைப்பிடி மண்ணாக வீசப்பட்ட இந்த இடத்தில் தற்போது ஒரு மணற்குன்றே உருவாகி உள்ளது. நேற்று கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், கைப்பிடி மண்ணை எடுத்துப் போட்டு இறைவனை வழிபட்டனர். மேலும் இரவில் இங்குள்ள பெருமாள் மலை மீது தீபம் ஏற்றியும் ஏராளமானோர் வழிபட்டனர். இதே போல் மேலவளவு கருப்பு கோயிலில் கற்களை வீசி வழிபடுவது வழக்கம். மிகவும் செங்குத்தான மலை மீது ஏறி, அங்கிருந்து கீழ் நோக்கி கற்களை வீசி இங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஆட்டுக்குளம் பெருமாள்மலையில் பக்தர்களின் வழிபாடு நேற்று காலை துவங்கி, இரவு வரை நடந்தது.

நேற்று இரவு இம்மலையில் உள்ள பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. உலகநாதபுரம் சக்திவேல் முருகன் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே போல் மேலூரைச் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள அனைத்து முருகன் கோயில்களின் முன்பும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Related Stories: