பழுதடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் சேதமடைந்த தரைப்பாலங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட 7 மற்றும் 8ம் வார்டுகளில் 6 தரைப்பாலங்கள் கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் சேதடைந்த பாலத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

மேலும் இப்பகுதியில் உள்ள உடல்நலம் குன்றியவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல  நோயாளிகளின் வீட்டருகே ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதிமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: