டெல்லி: மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இந்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா, பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடர்களுக்கு தனி தொகுதி ஒதுக்கீட்டு முறை நீட்டிப்பு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையே மருமக்களும் இனிமேல் தங்களது மாமனார் அல்லது மாமியாரை பராமரிப்பது கட்டாயம் என்ற சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.
வயதான பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் கட்டாய கடமை என்கிற சட்டத்தின் கீழ் பெற்றோருக்கு அதிகபட்சமாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாதாந்திர பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும். இதைச் செய்யத் தவறுபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனை வழங்க ஏற்கனவே சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்யப்பட்டு தற்போது மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்தம்) மசோதாவின் படி, வயதான பெற்றோர்களை கவனிக்க முடியாத பிள்ளைகள் மற்றும் மருமக்கள் பராமரிப்புத் தொகையாக அவர்களுக்கு அதிகபட்சம் மாதம் ரூ.10,000 அளிக்க வேண்டும். தற்போது, இந்த வரம்பு நீக்கப்பட்டு, அதிகம் சம்பாதிப்பவர்கள் தங்கள் பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையாக அதிக பணம் செலுத்த வேண்டும். இதை மீறுபவர்களுக்கு தண்டனையாக, குறைந்தபட்சம் ரூ.5,000 அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என புதிய சட்ட திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.