பெண் டாக்டர் கொலை வழக்கு: மனித உரிமை ஆணையத்தில் ஆதாரங்களை ஒப்படைத்தது போலீஸ்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அதன்படி ஹைதராபாத்துக்கு வந்துள்ள அந்த ஆணையத்தின் குழுவானது என்கவுன்ட்டர் தொடர்பாக போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது காயமடைந்த 2 போலீஸாரிடம் அந்தக்குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். இதில் குற்றவாளிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்காகவே தாங்கள் அவர்களை சுட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தாங்கள் இதுவரை சேகரித்த ஆதாரங்களையும் அக்குழுவிடம் போலீஸார் சமர்ப்பித்தனர்.

இதனிடையே பெண் டாக்டர் கொலை வழக்கானது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையையும், போலீஸார் வழங்கிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர். இந்த விசாரணையில் ஹைதராபாத் போலீஸ் ஆணையர் சஜ்ஜநார் நேரில் ஆஜராக உள்ளார்.

Related Stories: