தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருகிறது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சென்னை: தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கோனாம்பேடு பகுதியில் ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் சிலர் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் கொண்டு தண்ணீரை திருடி அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளன. எனவே கோனாம்பேடு பகுதிகளில் உள்ள குளங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவும், ஆக்கிர மிப்புக்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு அந்த கிராம பொது நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்பு வந்த போது, தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாகவும், தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், தற்போது விழித்து கொள்ளவில்லை என்றால் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: