காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் ரோட்டில் ஓரமாக உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காளையார்கோவிலை சுற்றியுள்ள 43 பஞ்சாயத்துக்கு தலைமையிடமாக காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அலுவலகத்திற்கு செல்லும் சிமிண்ட் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் சாலையின் ஓரமாக உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் புதர்மண்டி துர்நாற்றம் வீசுகின்றது. அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.