வாணியம்பாடியில் ஒருதலைக்காதலால் விபரீதம் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர்  ஜெகன்(27). ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக உள்ளார்.  இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த  லக்‌ஷணா(26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணை 5 ஆண்டுக்கு முன் கல்லூரியில் படிக்கும் போேத ஒருதலையாக காதலித்துள்ளார். இருவரும் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு செல்வது வழக்கம் அப்போதே அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அதை லக்‌ஷணா ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கல்லூரி படிப்பை முடித்து இருவரும் வேலைக்கு சென்றனர். அப்போதும் பஸ்சில் செல்லும்போது தொடர்ந்து தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், லக்‌ஷணாவுக்கும், வாணியம்பாடி  கச்சேரி ரோட்டை சேர்ந்த ஒருவருக்கும் அண்மையில்  திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதையறிந்த ஜெகன் கொதிப்படைந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு பஸ்சில் புறப்பட்ட லக்‌ஷணாவை பின்தொடர்ந்து ஜெகனும் சென்றுள்ளார். பேச்சு கொடுத்தபடி வந்த அவர், வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே வந்ததும் திடீரென லக்‌ஷணாவுக்கு தாலி கட்ட முயன்றார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே மற்ற பயணிகள் ஜெகனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், பஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ஓடும் பஸ்சில், இளம் பெண்ணுக்கு, வாலிபர் தாலி கட்ட முயன்ற சம்பவம் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: