திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் ரயில் நிலையம் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு இருந்த நாடோடிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குப்பைத் தொட்டியில் கிடந்த 10 மாத பெண் குழந்தையை எடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தனர். யாரோ குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றிருக்கிறார்கள், தாங்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என அவர்கள் நினைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த செல்வி(55) என்பவர், தங்கள் குடும்பத்திற்கு குழந்தை இல்லை என்று கூறி தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதில், செல்விக்கும், அவர்களுக்கும் கடும் தகராறு ஏற்பட்டது. அப்பகுதியினர் குழந்தையை மீட்டு ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திருப்பத்தூர் எஸ்ஆர்பிபிஎஸ் தொண்டு நிறுவன இயக்குநர் தமிழரசிக்கு தகவல் கொடுத்தனர். அவர் குழந்தையை கலெக்டரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில், ஆலங்காயம் காவல் நிலையத்தில் குழந்தையின் தாயின் பெற்றோர் புகார் அளித்தது தெரிந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு: திருப்பத்தூர் மாவட்டம், மேல் நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். முருகன் இவரது மகள் பிரியா(28), இவருக்கும் ஆலங்காயம் அருகே புதுபூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன்(38) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நடத்தையில் சந்தேகம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சில நாட்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர், ஊர் பெரியவர்கள் சேர்த்து வைத்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 10 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் ஆனந்தனுக்கும், பிரியாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த பிரியா, குழந்தையை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு ஓடியுள்ளார். இந்த குழந்தை தற்போது சமூக வலைதளங்களில் வந்ததை பார்த்த பிரியாவின் தந்தை குழந்தையும், தாயும் காணவில்லை என்று ஆலங்காயம் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பிரியாவை தேடி வருகின்றனர். அனைத்து ஆவணங்களும் பெறப்பட்ட பிறகு குழந்தையை உரியவர்களிடம் ஒப்படைக்க கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார்.