சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகளை முழுக்க, முழுக்க கன்னடர்களுக்கே வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆந்திராவில் தனியார் நிறுவன பணிகளில் 75 சதவீதம் உள்ளூர் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தனிச்சட்டம் எதுவும் இல்லை என்றாலும், ஐதராபாத் தவிர பிற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால், அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80 சதவீதம் பணிகளும், ராஜஸ்தானில் 75 சதவீதம் பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70 சதவீதம் பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகமும் உள்ளூர் மக்களுக்கு இத்தகைய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.