மதுரை: கதை திருட்டு வழக்கில் ‘கத்தி’ படத்தையும், ‘தாகபூமி’ குறும்படத்தையும் மாஜிஸ்திரேட் பார்த்து, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், தஞ்சை விவசாயிகளின் சிரமத்தையும், தற்கொலை செய்து கொண்டதையும் கருவாக வைத்து ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். இந்த கதையை திரைப்படமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், தனது தாகபூமி கதையை திருடி ‘கத்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜசேகர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கத்தி திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரித்த லைக்கா நிறுவனத்தினர், நடிகர் விஜய் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் தரப்பில் தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2014ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. தனது கதையை திருடி படம் எடுத்ததால், காப்பிரைட் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜசேகர் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.