கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கவர்னர் ஜக்தீப் தங்கருக்கு செக் வைக்கும் வகையில், புதிய சட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும் கவர்னர்தான் வேந்தர். இதனால் பல்கலைக் கழகங்கள் அனைத்து நேரடியாக கவர்னருடன்தான் தகவல் தொடர்பை வைத்து வந்தன.இந்நிலையில், மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் கவர்னருக்கு செக் வைக்கும் வகையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் புதிய சட்ட மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்தது.
இதன்படி, மாநில அரசின் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் இனி, அரசின் உயர்க்கல்வித் துறை வழியாகத்தான் வேந்தரை (கவர்னர்) தொடர்புக் கொள்ள வேண்டும். மேலும், பல்கலைக் கழகங்கள் இனி வேந்தரின் அனுமதியை எதிர்பார்க்காமல், நேரடியாக தாங்களே உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கலாம். ஆனால், மாநில உயர்க்கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், ‘‘இந்த சட்ட மசோதா எந்த விதத்திலும் கவர்னரின் அதிகாரத்தை பறிக்கவில்லை. கவர்னர் தன்னுடைய முடிவை உயர்க்கல்வித் துறை மூலம் செயல்படுத்திக் கொள்ளலாம்,’’ என்றார்.