திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சென்னை, கொச்சி, திருவனந்தபுரத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கொச்சியில் உள்ள வீட்டில் 4 யானை தந்தங்கள் இருந்தன. அவற்றை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வழக்கு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் மோகன்லால் மற்றும் அவருக்கு தந்தங்களை வழங்கிய 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘வனத்துறையினர் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’ என்று கேரள வனத்துறை அமைச்சர் ராஜூவிடம் மோகன்லால் கடிதம் கொடுத்தார்.
இதை விசாரித்த அமைச்சர் ராஜூ, மோகன்லாலின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மோகன்லாலுக்கு இதற்கு முன் ஆட்சி செய்த உம்மன்சாண்டி அரசு, சட்டத்துக்கு புறம்பாக லைசென்ஸ் வழங்கியுள்ளது. அதனால், மோகன்லால் சட்டப்படி இந்த வழக்கை சந்திக்க வேண்டும்,’ என்று வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமைச்சர் ராஜூ தெரிவித்துள்ளார்.