பெங்களூரு : கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் இரண்டொரு நாளில் சுமூகமாக நடைபெறும். இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 12 பேருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜவுக்கு 12 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசு பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது. குறிப்பாக இடைத்தேர்தல் முடிவு முதல்வர் எடியூரப்பாவுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
மாநிலத்தில் நிலையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக மக்கள் பாஜவுக்கு வாக்கு அளித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் மாநில மக்கள் வளர்ச்சியின் பக்கம் என்பதை நிரூபித்துள்ளனர். இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜவுக்கு எதிராக பொய்களை அவிழ்த்து விட்டனர். ஆனாலும் மாநில மக்கள் பாஜவின் நிர்வாகத்திற்கு அதிக அளவில் ஆதரவு அளித்துள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ எம்எல்ஏக்கள் 12 பேரும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாநில அமைச்சரவை விரிவாக்கம் இரண்டொரு நாளில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.