டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர பிரமாண்ட வெண்கல சிலை, உத்தர பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. தலைமை செயலகமான லோக் பவனில் வாஜ்பாயிக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். அந்த வகையில், ஜெய்ப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பக் கலைஞரான ராஜ்குமார் பண்டிட்டின் கை வண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. சுமார் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இச்சிலையை, வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உ.பி. தலைநகர் லக்னோ தொகுதியில் இருந்து தொடர்ந்து 5 முறை மக்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மூன்று முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் என்பவரால் ரூ.89.6 லட்ச மதிப்பில் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நிறுவப்படுவதன் மூலமாக மாநிலத்தின் மிக உயரமான சிலையாக இது இருக்கும். கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் உத்தம் பச்சர்னே தயாரித்த சுவாமி விவேகானந்தரின் 12.5 அடி வெண்கல சிலை ராஜ் பவனில் அப்போதைய ஆளுநர் ராம் நாயக் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.