3 நாட்களில்1 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கப்பட்டுள்ளது காவலன் செயலி: சென்னை காவல்துறை ஆணையர்

சென்னை: காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியான தொல்லைகளில் இருந்து காப்பதற்காக தமிழக அரசு, காவல் செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் இடையே போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும். அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். இவ்வாறு இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காவலன் செயலி மூலம் உதவி கோருவோருக்கு காவல்துறையினர் விரைந்து வந்து உதவி செய்வார்கள் என்றார்.

நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை நகரங்கள் திகழ்வதாக கூறிய அவர், சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களோடு பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலன் செயலியை பதிவிறக்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories: