காரைக்குடி: காரைக்குடி பழைய பஸ்ஸ்டாண்டை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் கைவிட்டதால் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி- கோவிலூர் சாலையில் பழைய பஸ்ஸ்டாண்டு உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, கோவைக்கு 9 பஸ்கள் செல்கின்றனர். தவிர புதுவயல், கல்லல், தேவகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட டவுன்பஸ், தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து புறப்படும் மதுரை உள்பட பல்வேறு பஸ்கள் வந்து செல்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகளின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. குடிக்க தண்ணீர் வசதி, லைட் வசதி கிடையாது. ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு இல்லை.. 19 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி அதிகாரிகள் யாரும் பழைய பஸ்ஸ்டாண்டை கண்டுகொள்ளவில்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் பஸ்ஸ்டாண்டு மேற்கூரை பகுதிகளில் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. தற்போது மேல்தளம் முழுவதும் தண்ணீர் தேங்கி லீக் ஆகி வருகிறது. இதனால் மேற்கூரை பெயர்ந்து அவ்வப்போது பயணிகளின் தலையில் விழுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் உட்புறம் உள்ள நடைமேடை முழுவதும் பெயர்ந்து காணப்படுகின்றன.