மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தடையில்லை: திருமாளவன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

சென்னை: மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தடையில்லை என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக திருமாளவன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. மறைமுக தேர்தலின் படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

மாறாக வார்டு கவுன்சிலர்கள் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அவசர சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. இந்த சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது.

எனவே மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும், என குறிப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கானது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல என்று தெரிவித்து, திருமாவளவன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம், என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: