சென்னை: சென்னை புழல் ஏரியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 2 டி.எம்.சி தண்ணீர் எட்டியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பிரதான ஏரிகளில் முக்கிய பங்கு வகிப்பது புழல் ஏரியாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய நீர்நிலைகள், நீர்படிப்பு பகுதிகளில் பெய்யக்கூடிய மழையை பொறுத்தே புழல் ஏரிக்கு நீர்வரத்து வரும். அதேபோன்று சோழவரம் ஏரியில் தேங்கக்கூடிய நீரும் புழல் ஏரிக்கு திருப்பிவிடப்படும். மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வழங்கக்கூடிய கிருஷ்ணா நதிநீர், பூண்டி ஏரியில் தேக்கிவைக்கப்பட்டு அங்கிருந்தும் புழல் ஏரிக்கு அனுப்பப்படும். கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தில் போது இந்த புழல் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகாக அடுத்தடுத்த ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக புழல் ஏரிக்கு முழுமையான நீர்வரத்து கிடைக்காததால் ஏரி வறண்டே காணப்பட்டது. அவ்வப்போது கிடைக்ககூடிய மழைநீரும் சிறிதே கிடைக்கப்பெற்றதால் 1 டி.எம்.சி கொள்ளளவை மட்டுமே இந்த புழல் ஏரி நிரம்பி இருந்தது.