காஞ்சிபுரம்: சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்திற்கு மத்திய அரசு சார்பில் ஏழு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தேசிய அளவில் தலைசிறந்த பல்கலைக்கழக விருது உள்ளிட்ட 7 விருதுகளை பெற்றுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த காட்டாங்கொளத்தூரில் 1985ம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பரிவேந்தரால் துவங்கப்பட்டது. இங்கு மருத்துவம், சட்டம், பொறியியல், வணிக மேலாண்மை, அறிவியல் மற்றும் கலை என பல்துறை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இங்கு பயின்று வருகின்றனர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு தலைசிறந்த பல்கலைக்கழகம் மற்றும் சிறந்த ஆராய்ச்சிகளுக்கான விருது ஆகிய விருதுகளை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு அளித்துள்ளது.
மேலும் மனித மேம்பாட்டுத்துறையின் சிறந்த சுகாதார வளாகம் விருது மத்திய அரசு நிறுவனமான ஏ.ஐ.சி.டி.இ- ன் சிறந்த சுத்தம், சுகாதாரம் மிக்க வளாகம் என்ற விருது என மொத்தம் 7 விருதுகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வென்றுள்ளது. இந்த தகவலை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலை கழகத்தின் தலைவர் சத்தியநாராயணன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசு சார்பில், ஏழு விருது வழங்கப்பட்டு உள்ளது. உயர்க்கல்வி நிறுவனங்களில், மரம் வளர்த்தல், துாய்மையான வளாகம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்புக்காக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூன்று விருது வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தீப், பதிவாளர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.