திருமலை: கால்நடை பெண் டாக்டர் டிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொலை வழக்கில் வழக்கு விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை 13ம் தேதி வரை பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டது. தெலங்கானா மாநிலத்தில், பெண் டாக்டர் டிஷா கொலை வழக்கு குற்றவாளிகள் என்கவுன்டர் விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தெலங்கானா மாநில அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரசாத் அரசு தரப்பு வாதத்தை முன் மொழிந்தார். என்கவுன்டர் விவகாரம் குறித்து மாநில அரசு ராட்சகொண்டா காவல்துறை ஆணையாளர் மோகன் பகவத் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து இருப்பதாகவும், எனவே வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.