புதுடெல்லி: கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் மாணவர்களின் கல்விக்கடன் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2016 முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 3 ஆண்டுகளில் வங்கிகள் கல்விக்கடனாக ரூ.67,685.59 கோடி கொடுத்துள்ளது. இது கடந்த ெசப்டம்பரில் ரூ.75,450.68 கோடியாக அதிகரித்துள்ளது. மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்யும் பரிந்துரை எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. மேலும் கடன் கொடுத்த வங்கிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக கடனை திருப்ப செலுத்த முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்ததாக எந்த புகாரும் வரவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மக்களவையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி தனது தொகுதியான மேற்குவங்கத்தின் செரம்பூரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அவர்களுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கேங்வார் அளித்த பதில்: வேலைவாய்ப்பு குறைந்துள்ளதற்கு எந்த காரணத்தையும் குறிப்பிட்டு காட்ட முடியாது. கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. வேலை வாய்ப்பு தேடி நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. மேலும் மாநிலத்திற்குள்ளே தொழிலாளர்கள் இடம்பெயரும் வகையிலான வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை சட்டம் 1979 அமலில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.