தேர்தலை நடத்தத் தயார் என்று கூறி முதல்வர் வீண் பழி சுமத்துவது கொள்ளையடித்து கொண்டு ஓடுவோரின் கூச்சலாக மட்டுமே இருக்க முடியும்: ஆர்.எஸ். பாரதி எம்.பி கடும்தாக்கு

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி  வெளியிட்ட அறிக்கை: திமுக தேர்தலைக் கண்டு பயப்படுகிறது” என்றும், “மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் எங்கள் கழகத் தலைவர்” என்று கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக என்ன கேட்கிறது? “உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி, சட்ட நெறிமுறைகளின் படி நடத்துங்கள்” என்று மட்டுமே கோரிக்கை வைத்துள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதில் சொல்ல வழியில்லாத முதல்வர், எங்கள் தலைவர் மீது வீண் பழி சுமத்துவது ‘’கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவோரின்’’ கூச்சலாக மட்டுமே இருக்க முடியும், கொள்கை ரீதியிலான அல்லது சட்ட ரீதியிலான வாதமாக நிச்சயம் இருக்க முடியாது. வார்டு மறுவரையறை என்று ஒரு ஆணையத்தை நியமித்து அதில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மாவட்ட ரீதியாக கொடுத்த ஆட்சேபனை மனுக்களை எல்லாம் கிடப்பில் போட்டு ‘’வார்டு மறு வரையறை’’ ஆணை வெளியிட்டது யார்?

எல்லாவற்றுக்குமே இதுவரை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காரணம் என்று நினைத்திருந்தோம். இப்போது மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொல்கிறார் என்றால், அந்த பழனிசாமிக்காக இந்த பழனிசாமிதான் மாநில தேர்தல் ஆணையத்தை சட்டவிரோதமாக செயல்பட வைத்துள்ளார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.  முதல்வர் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு உள்ளாட்சித் தேர்தல் ஒன்றும் அதிமுகவின் உள்கட்சித் தேர்தலும் இல்லை.எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு காரணமான ‘’கூவத்தூர்’’ தேர்தலும் அல்ல.  இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் முதல்வர் மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

அதை விடுத்து திட்டமிட்டு, சதிசெய்து உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டிட மூன்று வருடங்களாக ஒவ்வொரு குழப்பத்தையும் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த சட்டப் போராட்டம் நடத்தி வரும் எங்கள் கழகத் தலைவர் பற்றி குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் கழகத் தலைவர் சொல்லி திருந்தவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மனதில் வைத்தாவது உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்துவதற்கு முதல்வர் ‘’மனம் திருந்த வேண்டும்’’ என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: