சென்னை: பெருங்குடி மண்டலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் 125 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்த 15 மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பெருங்குடி மண்டலத்தில் உள்ள புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பஜார் சாலை, பெருங்குடி, பள்ளிக்கரணை மற்றும் பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
தெற்கு மண்டல கூடுதல் மாநகர நல அலுவலர் மகாலட்சுமி, மண்டல அலுவலர் பாஸ்கரன், மண்டல நல அலுவலர், ஆகியோர் தலைமையில் துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இணைந்து 65 வணிக நிறுவனங்களில் உணவு விடுதிகள், சாலையோர கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 125 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ₹8200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, பாலாஜி நகர் 3வது குறுக்கு சாலையில் செயல்பட்டுவந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை வணிக உரிமம் இன்றி செயல்பட்டுவருவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிறுவன உரிமையாளர்களுக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நிறுவனம் மூடி சீல் வைக்கப்பட்டது.