தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் சாலையில் லட்சுமிபுரம், முடிச்சூர், மணிமங்கலம், படப்பை வழியாக ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகள், காவல் நிலையம், திரையரங்கம், ஓட்டல்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு படப்பை, மணிமங்கலம், மண்ணிவாக்கம், மதனபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் தாம்பரம் - முடிச்சூர் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மதனபுரம் பகுதியில் சாலையின் நடுவே 30க்கும் மேற்பட்ட மாடுகள் தினமும் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி கீழே விழும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.