×

ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: 100 க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல்

சென்னை: ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்காகன வேட்புமனு தாக்கல் நேற்று காலை தொடங்கியது. முதல் நாளில் 100க்கும் மேற்பட்டவர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 27 மாவட்டங்களில்  மட்டும் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும்,  2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இரண்டு கட்டங்களுக்கும் வேட்பு மனுதாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இரண்டு கட்டமாக எந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் என்ற முழு விவரம்  மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களின் அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருந்தன. அனைத்து  மாவட்டங்களிலும் ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தனி அறைகளும்  அமைக்கப்பட்டிருந்தன. முதல் நாளான நேற்று கட்சி இல்லாமல் தேர்தல் நடைபெறும் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 10க்கு குறைவானவர்களே வேட்புமனு தாக்கல் செய்தனர். ேவட்பாளர்கள் வரும் 16ம் தேதி வரை வேட்பு  மனுக்களை தாக்கல் செய்யலாம். 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை முறையாக அறிவித்த  பின்புதான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக தாக்கல் செய்த மனுக்கள் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  

படிவங்கள்
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக படிவத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலத்திலிருந்து ரூ1 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிடில் தேர்தல் ஆணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதேப்போன்று  கட்சி படிவம், உறுதி மொழி ஆகியவற்றையும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நான்கு மனு ஒரு வைப்புத் தொகை
வேட்பாளர்கள் ஒரு பதவிக்கும் நான்கு வேட்புமனுக்கள் வரை தாக்கல் செய்யலாம். ஆனால் ஒரு வைப்புத் தொகை மட்டும் செலுத்தினால் போதும். வைப்புத் தொகையை ரொக்கமாகவோ அல்லது ஊராட்சி ஒன்றிய கருவூலத்திலோ  செலுத்தலாம்.

Tags : organizations ,elections , Rural Organization, Local Elections, Nominations
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!