×

44 முறை வாய்தா: நித்தியானந்தா எங்கே இருக்கிறார்?...டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: திருவண்ணாமலையில் சாதாரண குடிசையில் ஜோசியராக இருந்தவர் நித்தியானந்தா. அவரது உரை மற்றும் ஆன்மிக வழியால் ஈர்க்கப்பட்ட பெரும் பணக்காரர்கள், அவருக்காக சொத்துக்களை எழுதி வைக்க ஆரம்பித்தனர். இதில்  நித்தியானந்தா காஸ்ட்லி சாமியார் ஆகிவிட்டார். பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் நாட்டின் பல இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். தற்போது இவரது  ஆசிரமத்தின் கிளைகள் வெளிநாடுகளிலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அது அடங்கிப்போனது. தற்போது மீண்டும் அவர் மீது பல்வேறு புகார்கள் கிளம்பி உள்ளன. அவரது ஆசிரமம் மீது குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, பிடதி ஆசிரமத்தில் 2 நாட்கள் சோதனையும் நடத்தினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, நித்தியானந்தா  எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. அவரை தாங்கள் தேடி வருவதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஒரு நாட்டை உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் தனி கொடி, பாஸ்போர்ட்டை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி  உள்ளது. இந்த புதிய நாட்டிற்கு ‘நித்தியானந்தா கைலாஷா’ என்று நித்தியானந்தா பெயர் வைத்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே, அவர் வாங்கியுள்ள தீவை தான் தனிநாடாக ஆக்கி உள்ளார். இதை வாடிகனை  போன்று குட்டிநாடாக ஆக்குவதற்காக முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு, காவல்துறைக்கு  உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தா கண்காணிக்க சுற்றறிக்கை:

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ்குமார். நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது  என தெரிவித்தார். நித்தியானந்தா மீது சர்ச்சைகள் தொடர்வதை அடுத்து, அவர் வெளிநாடுகளில் பதுங்குவதைத் தடுக்க, அனைத்து நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சர்ச்சைகள் காரணமாக 2008- நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட  பாஸ்போர்ட் காலாவதி ஆகும் முன்பே 2018-ல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. நித்தியானந்தா பற்றி தவறான தகவல்கள் வந்ததால் அவருக்கு புதிய பாஸ்போர்ட் ஏதும் வழங்கப்படவில்லை. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம்  நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது என கூறினார்.



Tags : Karnataka High Court , Karnataka High Court issues notice to police by December 12
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...