×

சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது ஓராண்டு பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைதொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டார். இதுதொடர்பான வழக்கு கடந்த 4ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று கூறி சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது, ஆனாலும், பொன்.மாணிக்கவேல் உச்சநீதிமன்ற உத்தரப்படி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்காமல் இருந்து வருகிறார்.

ஏனெனில், தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளதாகவும், அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அவர் விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் இன்னமும் ஒப்படைக்கவில்லை. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.

அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாது, ஆவணங்களை ஒப்படைத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags : Supreme Court ,government ,Tamil Nadu ,Nadu ,abduction , Statutory Abduction, Documentary, Government of Tamil Nadu, Pon.Manikkavel, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...